விந்தை மனுஷி ! ( அதிசய பெண்)
“அறுபது வருடங்களாக அல்குர்ஆனையே பேசிய அதிசய பெண்..."
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப்பெரிய வல்லுநர். இமாமுனா அபூஹனீபா (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் சிறந்த மாணவர்களில் ஒருவர். ஒரே நேரத்தில் அவருடைய வகுப்பிலே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஹதீஸ் பாடம் பயில அமர்ந்திருப்பார்கள்.
ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு முபாரக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது வழியில் ஒரு பெண்ணைக் கண்டார்கள். மனித சஞ்சாரம் எதுவுமற்ற அந்த இடத்தில் அநாதரவாக வழி தவறி நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் சில கேள்விகள் கேட்க அந்தப் பெண் எல்லாக் கேள்விகளுக்கும் குர்ஆனிலிருந்தே பதிலளிக்க இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் திகைத்து நின்றார்கள்.
இமாம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
பெண்:
سَلٰمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ
“ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு."
(என்று ஸலாத்திற்கு பதில் கூறினாள். தொடர்ந்து தான் வழி தவறிவிட்டதாக,)
مَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِىَ لَهٗ وَ يَذَرُهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ
"எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்."
(என்று கூறினாள்.)
இமாம்: நீ எங்கிருந்து வருகின்றாய்❓ எங்கே போக வேண்டும்❓
பெண்:
سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ
"(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்"
(தான் மக்காவிலிருந்து வந்திருப்பதாகவும் தனது வசிப்பிடம் பலஸ்தீனம் என்றும் கூறினாள்.)
இமாம்: நீ எவ்வளவு நாட்களாக இந்த இடத்தில் அநாதரவாக இருக்கின்றாய்❓
பெண்:
قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا
“நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்."
(தான் மூன்று நாட்களாக அந்த இடத்தில் ஆதரவின்றி இருப்பதாக கூறினாள்.)
இமாம்: சாப்பாட்டிற்கு என்ன செய்தாய்❓
பெண்:
وَ الَّذِىْ هُوَ يُطْعِمُنِىْ وَيَسْقِيْنِۙ
“அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”
(தனக்கு வேண்டிய ஆகார பானங்களை அல்லாஹுதஆலா வழங்கியதாக கூறினாள்.)
இமாம்: வுழு செய்ய தண்ணீருக்கு என்ன செய்தாய்❓
பெண்:
وَلَا جُنُبًا اِلَّا عَابِرِىْ سَبِيْلٍ حَتّٰى تَغْتَسِلُوْا وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ
"நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்)."
(தான் தயம்மும் செய்து தொழுகைகளை நிறைவேற்றியதாக கூறினாள்.)
இமாம்: என்னிடம் சாப்பிட ஆகாரம் இருக்கின்றது. நீயும் சேர்ந்து கொள்ளலாம்.
பெண்:
ْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ
"இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்."
(தான் நோன்பு நோற்றிருப்பதாக அவள் கூறினாள்.)
இமாம்: இது றமழான் மாதம் அல்லவே❓
பெண்:
وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ
"இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்."
(தான் உபரியான நோன்பு நோற்று இருப்பதாக அவள் கூறினாள்.)
இமாம்: பயணத்திலிருக்கும் போது நோன்பை விடுவதற்கு அனுமதி இருக்கிறது.
பெண்:
وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
"ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)."
இமாம்: நான் பேசுவதைப் போன்று நீ பேசு.
பெண்:
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ
"கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை."
(ஒவ்வொரு மனிதனின் சகல நடவடிக்கைகளும் கண்ணியமான எழுத்தாளர்களால் பதியப்படுவதனால் தான் குர்ஆனின் வார்த்தைகளைத் தவிர வேறு ஒன்றும் பேசுவதில்லை என்று கூறினாள்.)
இமாம்: நீ எந்த குலத்தைச்
சேர்ந்தவள்❓
பெண்:
وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا
"எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்."
(தனக்குத் தெரியாத ஒரு விடயத்தினைப் பற்றி இமாம் அவர்கள் வினவக் கூடாது என்பதைத்தான் அவள் கூறினாள்.)
இமாம்: என்னை மன்னித்து விடு. நிச்சயமாக நான் தவறிழைத்து விட்டேன்.
பெண்:
قَالَ لَا تَثْرِيْبَ عَلَيْكُمُ الْيَوْمَ يَغْفِرُ اللّٰهُ لَـكُمْ وَهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
"அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக❗
அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார்."
இமாம்: நீ எனது ஒட்டகத்திலேறி பயணித்து உனது இருப்பிடத்தை அடைய விரும்புகின்றாயா❓
பெண்:
ّوَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ؔ
"நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்."
(இமாம் அவர்கள் நல்லதொன்றை செய்தால் அல்லாஹுதஆலாவும் அவருக்கு நலவையே நாடுவான் என்றாள்.)
இமாம்: சரி, நீ ஏறி உட்கார்.
பெண்:
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ
"(நபியே❗) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்."
(இமாம் அவர்கள் அவள் ஒட்டகத்திலேறும் போது தனது பார்வையைத் திருப்பிக் கொண்டார்கள். அவள் ஒட்டகத்திலேறும் போது அவளது ஆடை கொஞ்சம் சேணத்தில் மாட்டிக் கொண்டது. அப்போது...)
பெண்:
وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ
"அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம்."
(உடனே இமாம் அவர்கள் ஒட்டகத்தின் கால்களை கட்டி விட்டு அவள் ஏறுவதற்குரிய ஏற்பாடுகளை செய்தார்கள். அப்போது அவள்...)
பெண்:
فَفَهَّمْنٰهَا سُلَيْمٰنَ وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًا
"அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்."
(பயணத்தை ஆரம்பிக்கும் போது அவள்...)
பெண்:
سُبْحٰنَ الَّذِىْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَۙ
“இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்."
(என்ற பயண துஆவை ஓதினாள்.)
(இமாம் அவர்கள் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து ஒரு அராபியப் பாடலொன்றை படித்துக் கொண்டு ஒட்டகத்தை வேகமாக ஓட்டிச் சென்றார்கள். அப்போது அந்த பெண்...)
பெண்:
وَاقْصِدْ فِىْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ
“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்."
(உடனே இமாம் அவர்கள் ஒட்டகத்தை மெதுவாக ஓட்ட ஆரம்பித்து பாட்டினையும் மெதுவாக முணுமுணுத்தார்கள். அப்போது அவள்...)
பெண்:
فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰىۙ
"எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்."
(அதாவது வீணான பாட்டு பாடுவதை விட குர்ஆன் ஓதுவது பல மடங்கு மேலானது என்றாள். இமாம் அவர்கள் குர்ஆன் ஓத ஆரம்பிக்கும் போது அவள்...)
பெண்:
يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ
"தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை."
(என்று கூறினாள். குர்ஆன் ஓதி முடித்த பிறகு இமாம் அவர்கள்...)
இமாம்: உன்னுடைய கணவன்...❓
பெண்:
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَسْـٴَــلُوْاعَنْ اَشْيَآءَ اِنْ تُبْدَ لَـكُمْ تَسُؤْكُمْ
"ஈமான் கொண்டவர்களே❗சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும்."
(அனேகமாக அவளது கணவன் இறந்துவிட்டதை அவள் அவ்வாறு சொல்லியிருக்கலாம். இறுதியில் அந்த பெண்ணின் இருப்பிடத்தை அடைந்ததும் இமாம் அவர்கள்...)
இமாம்: உனக்கேதும் பிள்ளைகள்..❓
பெண்:
اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا
"செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்."
இமாம்: அவர்கள் என்ன வேலை செய்கின்றார்கள்❓
பெண்:
وَعَلٰمٰتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُوْنَ
"(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்."
இமாம்: உனதுபிள்ளைகளின் பெயர்கள்❓
பெண்:
وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِيْمَ خَلِيْلًا
"இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்."
وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا
"இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்."
يٰيَحْيٰى خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ
"(அதன் பின்னர்) “யஹ்யாவே❗ நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்.”
(தனது பிள்ளைகளின் பெயர்கள் இப்றாஹீம், மூஸா, யஹ்யா என அவள் கூறினாள். இமாம் அவர்கள் அந்த மூன்று பிள்ளைகளையும் அழைக்க அந்த மூவரும் குடிசைக்குள்ளிருந்து வெளியே ஓடி வந்தனர். அப்போது அந்த பெண் அவர்களிடம்...)
பெண்:
ْ هٰذِهٖۤ اِلَى الْمَدِيْنَةِ فَلْيَنْظُرْ اَيُّهَاۤ اَزْكٰى طَعَامًا فَلْيَاْتِكُمْ بِرِزْقٍ
"ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்."
(இமாம் அவர்களுக்கு ஏதும் உணவு வாங்கி வந்து உபசரிக்குமாறு அவள் பணித்தாள். சாப்பாடு கொண்டு வரப்பட்ட பிறகு அவள் இமாமவர்களைப் பார்த்து...)
பெண்:
كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓـــٴًــا بِمَاۤ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَـالِيَةِ
“சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்)."
(என்றும் இமாம் அவர்களின் உதவி உபகாரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பின்வருமாறும்...)
பெண்:
هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி
உண்டா❓"
(என்று கூறினாள்.)
இறுதியில் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் அந்த பெண்ணின் பிள்ளைகளிடம் அவளது இந்த விநோதமான நடத்தைக் குறித்து வினவ அவர்களோ "தமது தாய் சுமார் அறுபது வருடங்களாக குர்ஆனைத் தவிர வேறு ஒன்றையும் பேசுவதில்லை. காரணம், பேசப்படும் விடயங்கள் யாவும் சங்கையான எழுத்தாளர்களால் பதியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகவே குர்ஆனைத் தவிர வேறு ஒரு வார்த்தையைப் பேசி ஒருவேளை அது தப்பான வார்த்தையாக இருந்தால் தான் பாவத்தில் வீழ்ந்து விடுவோம் என்ற தக்வாவில் தான்" என்று கூறினார்கள்.
அப்போது இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள்:
ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ
"அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்."
என்று பதிலளித்தார்கள்.
ஜவாஹிருல் அதப் எனும் கிதாபிலிருந்து...!
Comments
Post a Comment