ஒரு நிமிடம்!!!
﷽
#ஒரு_நிமிடத்தில்_இவ்வளவா!!!
நேரம் விலைமதிப்பற்றது அதை வீணாக்குவது தன்னை தானே துன்புறுத்துவதற்கு சமம். ஒரு அறிவாளி எப்பொழுதும் தன் நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டான். அவன் தன்னால் முடிந்தவரை நேரத்தை நன்மையில் செலவிடுவான். அவனுடைய செயல்கள் எல்லாம் அல்லாஹ்வின் பொருத்தத்தை பொருத்தே அமைந்திருக்கும். நன்மைகளை கொள்ளை அடிப்பதற்காகவே இருக்கும். தன் வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கே அவன் முனைவான்.
நீங்கள் உயர் பதவியை அடைய விரும்பினால்,மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த நினைத்தால், உங்கள் விளையாட்டுதனதிற்கு சற்று விடுமுறை கொடுங்கள், அசட்டுதனத்தை சற்று அடக்கி வையுங்கள்.
ஒரு நிமிடம், அதில் எவ்வளவு காரியம் சாதிக்கலாம்!
ஒரு நிமிடத்தை ஒரு நிமிடமாக பார்ப்பவர்களும் உண்டு.
60 நொடிகள் ஆக பார்ப்பவர்களும் உண்டு.
அதை நேரமாக கருதாத வர்களும் உண்டு
நிமிடத்தில் நிகழ்த்துகின்ற நிகழ்ச்சிகளை இங்கு பட்டியலிடுகிறேன்:
1. ஒரு நிமிடத்தில் குர்ஆனின் தாயை (அல்-ஃபாதிஹாவை) மூன்று முறை ஓதலாம். தொடர்ச்சியாகவும், விரைவாகவும் ஓதுவது நன்மைகளைப் பெற்றுத்தரும். அறிஞர்கள் கூறுகிறார்கள் ஒருமுறை சூரா பாத்திஹாவை ஓதினால் 600 நன்மைகள் வரை கிடைக்குமாம் மூன்று முறை ஓதினால் 1800 நன்மைகள் என்று அழகிய முறையில் நன்மைகளை நிமிடத்தில் தட்டிச் சென்று விடலாம்.
2. குர்ஆனிலிருந்து ஒரு பக்கத்தை ஓதி முடிக்கலாம்.
3. சிறு வசனங்களை மனனமிடலாம்.
4. ஒரு மாதம் நீங்கள் ஒவ்வொரு நிமிடமாக செலவிட்டால் 210 முறை குர்ஆனை ஓதி முடிக்கலாம் ஆம் இக்லாஸ் சூராவை சுமார் ஒரு நிமிடத்தில் 20 முறை வரை ஓதலாம்(அதாவது குல்ஹுவல்லாஹு அஹது) இதற்கு இருக்கின்ற தனி சிறப்பே இதை ஒரு முறை ஓதினால் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதியதற்கு சமமாகும். ஆக ஒரு நிமிடத்தில் 20 முறை ஓதுவது ஒரு வாரத்தில் முழு குர்ஆனையும் ஏழு முறை ஓதுவதற்கு சமம். ஒரு நிமிடத்தில் 20, ஒரு மாதத்தில் 600 முறை, ஒரு வருடத்தில் சுமார் 7200 முறைகள் அதாவது நீங்கள் ஒரு மாதத்தில் ஓரிரு பக்கங்களில் முடிப்பதற்குள் முழி பிதுங்கி விடுகிறது. ஆனால் ஒரு மாதத்திலேயே 210 முறை முழு குர்ஆனையும் முடிப்பது என்று சொன்னால் எவ்வளவு நன்மைகளைப் பெற்றுத்தரும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். (புகாரீ - 6643).
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
5. "லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்"(வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,அவன் தனித்தவன்,அவனுக்கு இணை யாருமில்லை,அதிகாரம் அனைத்தும் அவனுக்கே,புகழ் அனைத்தும் அவனுக்கே,அவன் அனைத்து பொருளின் மீதும் ஆற்றலுடையவன்)என்று 20 முறை சொல்லலாம்.அவ்வாறு சொல்வதன் மூலம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் 8 அடிமைகளை உரிமை விட்ட நன்மை கிடைக்கும்.
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ.
6. "சுபஹானல்லாஹி வபிஹம்திஹி" என்பதை 100 முறை ஒரு நிமிடத்தில் சொல்லலாம்,கடல் நுரை அளவு பாவம் இருந்தாலும் அவை அனைத்தும் நிமிடத்தில் துடைத்து எறியப்படும். (புகாரீ - 6405).
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ.
7. "சுபஹானல்லாஹி வபிஹம்திஹி சுபஹானல்லாஹில் அழீம்" என்பதை 50 முறை உச்சரிக்கலாம் மீசான் தராசில் மிகவும் கனமான, நாவிற்கு மிக எளிமையான, அருளாளனுக்கு மிகவும் விருப்பமான இரண்டு வார்த்தைகளாகும். (புகாரீ - 6682)
8. கண்மணி நாயகம்(ஸல்) கூறினார்கள்:
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ
"நான் 'சுப்ஹானல்லாஹ், வல்ஹம்துலில்லாஹ், வலாயிலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர்'(அல்லாஹ் தூய்மையானவன் என்று துதிக்கிறேன், எல்லா புகழும் அல்லாஹ்விற்கே, வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வது சூரியன் எதன்மீது உதிப்பைதை விட எனக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கிறது". (அதாவது சூரியன் உதிக்கின்ற இந்த பூமியையும் இந்த பூமியிலுள்ள சுகங்களையும் எனக்களித்தாலும் அதை நான் ஒருபோதும் விரும்பாமல் இந்த வார்த்தைகளை சொல்வதையே விரும்புகிறேன்.) என்று நபிகள் நாயகம் கூறுகிறார்கள். ஒரு நிமிடத்தில் 18 முறை இந்த வார்த்தைகளை உச்சரிக்கலாம். இவை அல்லாஹ்விடத்தில் விருப்பத்திற்குரிய வார்த்தைகளாகவும் நன்மைகளை அள்ளி தரவல்லதாகவும் இருக்கிறது.(முஸ்லிம் - 2695, 2137)
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ.
9. ஒரு நிமிடத்தில் "லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" (தீமையிலிருந்து திரும்புவதும் நன்மை செய்வதற்கான ஆற்றலும் அல்லாஹ்வைக் கொண்டு அல்லாது வேறில்லை) என்பதை 40 முறை கூறலாம். இது சொர்கத்து புதையல்களில்களில் ஒன்று என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.மேலும் அவை சிரமங்களை சமாளிப்பதற்காக நோக்கங்களை அடைவதற்காக ஊக்கமளிக்கும் ஒரு வார்த்தையாக இருக்கிறது. (புகாரீ - 4205)
10. "லா இலாஹா இல்லல்லாஹ்" என்பதை நிமிடத்தில் 50 முறை கூறலாம். இது தவ்ஹீத் (ஏகத்துவத்தின்)உடைய மகத்தான வார்த்தை. உள்ளத்தை உறுதிபடுத்துகின்ற வார்த்தை.ஒரு மனிதனின் இறுதி வாசமாக இது அமைந்துவிட்டால் அவன் சேரும் இடம் சொர்க்கம் தான். மேலும் இதற்கு பல சிறப்புகளும், நன்மைகளும் உள்ளன. (அபூ தாவூத் - 3116)
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ.
11. "சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி வஅதத ஃகல்கிஹி,வரிழா நஃப்ஸிஹி ,வஜீனத அர்ஷிஹி ,வமிதாத கலிமாத்திஹி"(அல்லாஹ்வை அவனுடைய புகழை கொண்டு தூய்மையானவன் என்றும், அவன் படைப்பின் எண்ணிக்கை அளவிலும்,அவனுடைய பொருத்தத்தின் அளவிலும், அவன் அரிஷின் எடை அளவிலும், அவன் வார்த்தைகளில் மை அளவிலும், அவனை புகழ்கிறேன்) என்பதை ஒரு நிமிடத்தில் 15 முறை சொல்லலாம். சாதாரணமாக நாம் சொல்லும் திக்ருகளை விட இவ்வார்த்தைகள் அதிக நன்மைகளை பெற்று தரும். (முஸ்லிம் - 2726)
12. ஒரு நிமிடத்தில் சுமார் நூறு முறை பாவமன்னிப்புத் தேடலாம் "அஸ்தஃபிருல்லாஹ்" (அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்).
13. சில சுருக்கமான நன்மையான வார்த்தைகளை பேசுவதன் மூலம் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பல நன்மைகளை அல்லாஹ் ஏற்படுத்தக்கூடும்.
14. ஒரு நிமிடத்தில் நீங்கள் அகிலத்தின் அருட்கொடையின் மீது ஐம்பது முறை ஸலவாத் சொல்லலாம் "ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்"என்று 50 முறை சொல்வதானது அல்லாஹ் நமக்கு 500 மடங்கு, அதாவது ஒரு சலவாத்திற்க்கு10 மடங்கு என்ற விதத்தில் அல்லாஹ் நமக்கு அருள் புரிவான். (முஸ்லிம் - 384).
15. நிமிடத்தில் அல்லாஹ்விற்கு இதயத்தால் நன்றி செலுத்துவது, அவனை பயப்படுவது, அவன்மீது அதிகமதிகம் அதரவுவைப்பது, அவனுடைய உதவியை எதிர்பார்ப்பது, இது எல்லாம் "ஊபூதிய்யா" (அடிமைத்தனத்தில்) உள்ளது இதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கமும் உதவியும் பெறலாம்.
16. ஒரு நிமிடத்தில் சுலபமான நல்ல புத்தகங்களை வாசிக்கலாம் இஸ்லாத்தை பற்றி அதிகம் அறிந்து கொள்ளலாம்.
17 ஒரு நிமிடத்தில் உறவினர்களிடம் உரையாடலாம் இதன் மூலம் "ரிஸ்க்" விசாலமடையும் உறவுகள் வலுப்படும். (புகாரீ - 2067).
18. ஒரு நிமிடத்தில் நம் இரு கைகளையும் உயர்த்தி இறைவனிடம் மன்றாடலாம்.நம் தேவைகளை கேட்கலாம்.
19. ஒரு நிமிடத்தில் எண்ணற்ற நண்பர்களுக்கு கைகொடுத்து சலாம் சொல்லலாம், சகோதரத்துவம் மேம்படும் சொர்க்கம் செல்ல நபிகளார் நமக்கு காட்டி தந்த வழிகளில் ஒன்று. (முஸ்லிம் - 54).
20. ஒரு நிமிடத்தில் தீமையைத் தடுக்கலாம்.
21. ஒரு நிமிடத்தில் நன்மையை ஏவலாம், நல்ல விஷயங்களில் கலந்து கொள்ளலாம்.
22. உடன் பிறந்த பிறக்காத சகோதர சகோதரிகளுக்கு நல்லுபதேசம் செய்யலாம்.
23. கஷ்டத்திலும் சோகத்திலும் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறலாம்.
24. மக்களுக்கு இடையூறாக இருப்பவற்றை அகற்றலாம்.
25. ஒரு நிமிடத்தை நீங்கள் எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பது பொருத்தே மற்ற நிமிடங்களும் அமைகிறது.
25 நிமிடதிற்கான செயல்களை நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
இதன் மூலம் நேரம் விரயமாவதை முற்றிலும் தடுத்து நல்லதோர் செயலை நாளும் செய்து நன்மைகள் பல குவித்து நல்லடியார்களோடும் நபிமார்களோடும் நாளை மறுமையில் நட்புறவாடும் வாய்ப்பை நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.....!!!!
📤 இதை அனைவருக்கும் பகிரவும்
💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]
Comments
Post a Comment